Principles of Communism
(Frederick Engels)
Translated By: M.Sivalingam

கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
(ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்


[கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.]

குறிப்பு: நூல் முழுதும் சதுர அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை
யாவும் மொழிபெயர்ப்பாளர் எழுதியவை.


(1) கம்யூனிசம் என்றால் என்ன?

கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும்.

(2) பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?

பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தனது உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது.[1]

(3) பாட்டாளிகள் என்பவர்கள் எப்போதுமே இருந்திருக்க வில்லையா?

இல்லை. ஏழை மக்களும் தொழிலாளி வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்துள்ளனர். மேலும் தொழிலாளி வர்க்கம் பெரும்பாலும் ஏழ்மையாகவே இருந்துள்ளது. ஆனால் இன்று இருப்பதைப் போன்ற சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்களும் ஏழை மக்களும் எப்போதும் இருந்திருக்கவில்லை. வேறு சொற்களில் கூறுவதெனில், இன்றைய சுதந்திர, கட்டுப்பாடற்ற [வணிகப்] போட்டிகள் எப்போதும் இருந்திருக்கவில்லை; அதுபோலவே இன்றைய பாட்டாளி வர்க்கத்தினர் எப்போதும் இருந்திருக்கவில்லை.

(4) பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது?

கடந்த (18-வது) நூற்றாண்டின் பிந்தைய பாதியில் இங்கிலாந்தில் உருவாகியதும், அதன்பின்னர் உலகின் அனைத்து நாகரிக நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்ந்ததுமான தொழில் புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உதித்தது.

நீராவி எஞ்சின், பல்வேறு நூற்பு எந்திரங்கள், விசைத்தறி மற்றும் இதர எந்திரக் கருவிகள் பலவற்றின் கண்டுபிடிப்பினால் இந்தத் தொழில் புரட்சி வலுப்பெற்றது. இந்த எந்திரங்கள் அதிக விலையுள்ளவை. எனவே பெரிய முதலாளிகளால் மட்டுமே வாங்க இயலும். இவை, உற்பத்திமுறை முழுவதையும் மாற்றி விட்டன. மேலும் இதுவரை இருந்துவந்த தொழிலாளர்களை வெளியேற்றின. காரணம், தொழிலாளர்கள் தமது திறனற்ற கைராட்டைகள், கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்களைவிட மலிவான, சிறப்பான பண்டங்களை எந்திரங்கள் உற்பத்தி செய்தன. இவ்வாறாக, எந்திரங்கள் தொழில்துறையை முழுமையாகப் பெரும் முதலாளிகள் வசம் ஒப்படைத்துவிட்டன. மேலும், தொழிலாளர்களின் அற்ப சொத்துகளை (கருவிகள், கைத்தறிகள் போன்றவற்றை) முற்றிலும் பயனற்றவை ஆக்கிவிட்டன. இதன் விளைவாக, முதலாளிகள் வெகுவிரைவில் எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொண்டனர். தொழிலாளர்களுக்கென எதுவும் மிஞ்சவில்லை. துணி உற்பத்தித் துறையில் ஆலை உற்பத்திமுறை புகுத்தப்பட்டது இதற்கு ஓர் அடையாளம் ஆகும்.

எந்திரங்கள் மற்றும் ஆலை உற்பத்தி முறையைப் புகுத்திட ஒரு தூண்டுதல் அளிக்கப்பட்டவுடனே ஆலை முறை தொழில்துறையின் இதர பிரிவுகள் அனைத்திலும் குறிப்பாக, நெசவு, புத்தக அச்சடிப்பு, மண்பாண்டம் மற்றும் உலோகத் தொழிலகங்களில் மிக விரைவில் பரவியது.

உழைப்பு, தனித்தனித் தொழிலாளர்களுக்கிடையே மேலும் மேலும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. எனவே, முன்பெல்லாம் ஒரு முழுப் பொருளையும் உருவாக்கிய ஒரு தொழிலாளி இப்போது அந்தப் பொருளின் ஒருபகுதியை மட்டுமே உற்பத்தி செய்தான். இந்த உழைப்புப் பிரிவினை, பொருட்களை முன்பைவிட விரைவாகவும் மலிவாகவும் உற்பத்தி செய்வதைச் சாத்தியம் ஆக்கியது. இது ஒவ்வொரு தொழிலாளியின் பணியையும், இடையறாது திரும்பத்திரும்ப நிகழும் எளிதான எந்திர இயக்கமாகக் குறைத்தது. தொழிலாளி செய்துவந்த வேலையை, ஓர் எந்திரமானது அதே தரத்தில் மட்டுமின்றி, அதைவிட மேலும் சிறப்பாகவும் செய்ய முடியும். இவ்வாறாக, நூற்பு மற்றும் நெசவுத் தொழில்களில் ஏற்கெனவே நிகழ்ந்தது போலவே, அனைத்துத் தொழில்துறைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நீராவி, எந்திரங்கள் மற்றும் ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.

ஆனால், அதேவேளையில் அத்தொழில்துறைகள் பெரும் முதலாளிகளின் கைகளில் மாட்டிக் கொள்ளவும் செய்தன. மேலும் அவற்றின் தொழிலாளர்கள் தங்களிடம் மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சுதந்திரத்தையும் பறிகொடுத்தனர். பெரும் முதலாளிகள் மிகப்பெரிய தொழிற்கூடங்களை அமைப்பதன்மூலம் சிறிய கைவினைத் தொழில் விற்பன்னர்களை மிகப் பெருமளவில் வேலையிழக்கச் செய்தனர். இத்தொழிற்கூடங்கள் பல செலவுகளைச் சிக்கனப்படுத்தின; மிக விரிவான உழைப்புப் பிரிவினைக்கும் வழிவகுத்தன. இதன் காரணமாய்ச் சீரான பட்டறைத் தொழில் மட்டுமல்ல, கைவினைத் தொழில்களும்கூடப் படிப்படியாக ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.

இவ்வாறாகவே, நாகரிகமடைந்த நாடுகளில், தற்போதைய காலகட்டத்தில், ஏறத்தாழ உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழிற்கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்துப் பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும், பட்டறைத் தொழிலும் விழுங்கப்பட்டுவிட்டன. இந்த நிகழ்ச்சிப்போக்கு, முன்னெப்போதையும்விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தைக் குறிப்பாக சிறிய கைவினைத் தொழில்முனைவோரைச் சிதைத்து அழித்துவிட்டது; தொழிலாளர்களின் வாழ்நிலையை முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட்டது; இரண்டு புதிய வர்க்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பிற வர்க்கங்கள் அனைத்தையும் படிப்படியாக விழுங்கி வருகின்றன. அந்த இரு வர்க்கங்களாவன:

(1) பெரும் முதலாளிகளின் வர்க்கம். இந்த வர்க்கத்தினர், ஏற்கெனவே எல்லா நாகரிக நாடுகளிலும், பிழைப்புப் சாதனங்கள் அனைத்தையும், உற்பத்திக் கருவிகளையும் (எந்திரங்கள், தொழிற்கூடங்கள்), பிழைப்புச் சாதனங்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களையும், ஏறத்தாழ தங்களின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே முதலாளித்துவ வர்க்கம் [பூர்ஷ்வா வர்க்கம்] அல்லது முதலாளிகள் [பூர்ஷ்வாக்கள்].

(2) அறவே உடைமையற்ற வர்க்கம். தங்கள் வாழ்வுக்குத் தேவையான பிழைப்புச் சாதனங்களைப் பெறும்பொருட்டு, தங்கள் உழைப்பை முதலாளிகளுக்கு விற்கக் கடமைப்பட்டவர்களின் வர்க்கம். இவர்களே பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளிகள் எனப்படுகின்றனர்.

(5) பாட்டாளிகளின் உழைப்பு முதலாளிகளுக்கு விற்கப்படுவது எந்த நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது?

உழைப்பு என்பது ஏனைய பண்டங்களைப் போலவே ஒரு பண்டமாகும். எனவே, அதன் விலையும் பிற பண்டங்களின் விலையைத் தீர்மானிக்கும் அதே விதிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெருவீதத் தொழில்துறை அல்லது கட்டற்ற போட்டியின் – இந்த இரண்டும் ஒன்றிலேயே முடியும் என்பதை நாம் காண இருக்கிறோம் – ஆதிக்கத்தில் சராசரியாக ஒரு பண்டத்தின் விலை எப்போதும் அந்தப் பண்டத்தின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது. எனவே உழைப்பின் விலையும் அந்த உழைப்பின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது.

உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது, தொடர்ந்து வேலை செய்துவருவதற்கான சக்தியைத் தொழிலாளிக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்துபோய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய்க் குறிக்கிறது. எனவே, இந்த நோக்கத்துக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொழிலாளி தனது உழைப்புக்காகப் பெறப்போவதில்லை. வேறு வகையாகக் கூறுவதெனில், உழைப்புக்கான விலை அல்லது கூலியானது, ஆகக் குறைந்ததாக, வாழ்க்கைப் பராமரிப்புக்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச அளவாக இருக்கும்.

என்றபோதிலும், வணிக நிலைமை சிலவேளை நன்றாகவும், சிலவேளை மோசமாகவும் இருப்பதால், தொழிலதிபர் தமது பண்டத்துக்குச் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுவதைப் போன்றே தொழிலாளியும் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுகிறார். ஆனால் தொழிலதிபர் சராசரியாக, நல்ல நிலைமையிலும் சரி, மோசமான நிலைமையிலும் சரி தமது பண்டத்துக்கு அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவோ குறைவாகவோ பெறுவதில்லை. அதுபோலவே தொழிலாளி சராசரியாக, அவனது குறைந்தபட்சத் தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பெறுவதில்லை.

உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் பெரும் தொழில்துறை எந்த அளவுக்கு அதிகமாகத் தன் வசப்படுத்திக் கொள்கிறதோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக, கூலி தொடர்பான இந்தப் பொருளாதார விதி செயல்படுகிறது.

(6) தொழில் புரட்சிக்கு முன்னால் நிலவிய தொழிலாளி வர்க்கங்கள் எவை?

தொழிலாளி வர்க்கங்கள் எப்போதுமே, சமுதாய வளர்ச்சியின் வெவ்வேறு கால கட்டங்களுக்கு ஏற்ப, வெவ்வேறு சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வந்துள்ளன; அவை உடைமை மற்றும் ஆளும் வர்க்கங்களுடன் வெவ்வேறு வகையான உறவுநிலைகளைக் கொண்டிருந்தன.

பல பின்தங்கிய நாடுகளிலும், அமெரிக்க நாட்டின் தென்பகுதியிலேகூட இப்போதும் இருந்து வருவதைப்போலப் பண்டைக் காலத்தில் தொழிலாளர்கள் உடைமையாளர்களிடம் அடிமைகளாக இருந்தனர்.

ஹங்கேரி, போலந்து, ருஷ்யா ஆகிய நாடுகளில் இப்போதும் இருந்து வருவதைப்போல, மத்திய காலங்களில் இவர்கள் நிலவுடைமைப் பிரபுக்களின் பண்ணை அடிமைகளாக இருந்தனர். இவர்கள் தவிர, மத்திய காலங்களில், சொல்லப்போனால் தொழில் புரட்சி காலம் வரையிலும்கூட, நகரங்களில் குட்டி முதலாளித்துவ எஜமானர்களின் சேவையில் வேலை செய்துவந்த கைவினைத் தொழிலாளர்கள் இருந்தனர். பட்டறைத் தொழில் வளர்ச்சி அடைந்தபோது, படிப்படியாக, இந்த கைவினைத் தொழிலாளர்கள் பட்டறைத் தொழிலாளர்களாக மாறினர். பின்னாளில் அவர்கள் பெரும் முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

(7) பாட்டாளிகள் அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?

அடிமை ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டுவிடுகிறான்; பாட்டாளியோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தன்னை விற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு தனிப்பட்ட அடிமையானவன், ஓர் எஜமானனின் சொத்து ஆவான். அந்த எஜமானனின் நலன்கருதியே. எவ்வளவு கேவலமானதாக இருந்தபோதிலும், அடிமைக்கென ஒரு வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு தனிப்பட்ட பாட்டாளியும் ஒருவகையில் முதலாளித்துவ வர்க்கம் முழுமையின் உடைமையாகிறான். பாட்டாளியின் உழைப்பை, அது யாரேனும் ஒரு முதலாளிக்குத் தேவைப்படும்போது மட்டுமே, முதலாளித்துவ வர்க்கம் விலைக்கு வாங்குகிறது. எனவே, ஒரு தனிப்பட்ட பாட்டாளியின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் ஏதுமில்லை. [பாட்டாளி] வர்க்கம் முழுமைக்குமாகத்தான் அத்தகைய வாழ்க்கை உத்திரவாதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடிமை போட்டிக்கு வெளியே நிற்கிறான். பாட்டாளியோ, அதனுள்ளேயே நிற்கிறான்; போட்டியின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.

அடிமை ஒரு பண்டமாகவே கருதப்படுகிறான், சமுதாயத்தின் ஓர் உறுப்பினனாகக் கருதப்படுவதில்லை. அதேவேளை, பாட்டாளியானவன் சமூக வளர்ச்சியின் ஓர் உயர்ந்த கட்டத்துக்கு உரியவனாகவும், அடிமையைக் காட்டிலும் ஒர் உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற்றவனாகவும் இருக்கின்ற போதிலும், அடிமையானவன் பாட்டாளியைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கையைப் பெற முடியும்.

அடிமையானவன், தனியார் சொத்துடைமையின் உறவுகள் அனைத்திற்குள்ளும் அடிமை உறவை மட்டுமே முறித்துக் கொள்வதன்மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான்; அதன்மூலம் ஒரு பாட்டாளியாகப் பரிணமிக்கிறான். ஆனால், பாட்டாளியோ, பொதுவாகத் தனியார் சொத்துடைமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.

(8) பாட்டாளிகள் பண்ணை அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?

பண்ணையடிமை உற்பத்திக் கருவியான ஒரு துண்டு நிலத்தை உடைமையாய்க் கொண்டு, அதைப் பயன்படுத்துகிறான். அதற்கு ஈடாக அவன் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கிறான். அல்லது தனது உழைப்பின் சேவைகளில் ஒரு பகுதியை வழங்குகிறான்.

பாட்டாளியானவன் இன்னொருவருக்குச் சொந்தமான உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி வேலை செய்கிறான். அதற்கு ஈடாகத் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை பெறுகிறான்.

பண்ணையடிமை கொடுக்கிறான், பாட்டாளி பெறுகிறான். பண்ணையடிமைக்கு உறுதிப்படுத்தப்பட்ட வாழ்க்கை உள்ளது, பாட்டாளிக்கு அத்தகைய வாழ்க்கை இல்லை. பண்ணையடிமை போட்டிக்கு வெளியே இருக்கிறான், பாட்டாளியோ போட்டியின் உள்ளேயே இருக்கிறான்.

பண்ணையடிமை மூன்று வழிகளில் தன்னை விடுவித்துக் கொள்கிறான்: நகரத்துக்குத் தப்பி ஓடி அங்கே ஒரு கைவினைப் பணியாளன் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவுக்கு உற்பத்திப் பொருட்களையும் உழைப்பையும் கொடுப்பதற்குப் பதில் பணத்தைக் கொடுத்து, அதன்மூலம் சுதந்திரமான குத்தகைதாரர் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவை விரட்டிவிட்டுத் தானே நிலத்துக்கு உடைமையாளன் ஆகிவிடுகிறான். சுருங்கக்கூறின், ஏதேனும் ஒரு வழியில் உடைமை வர்க்கத்தின் அங்கமாகிப் போட்டியில் நுழைந்துவிடுவதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான். பாட்டாளியோ தொழில்போட்டி, தனியார் சொத்துடைமை மற்றும் அனைத்து வர்க்க வேறுபாடுகளையும் ஒழிப்பதன் மூலமே தன்னை விடுவித்துக் கொள்வான்.

(9) பாட்டாளிகள் கைவினைப் பணியாளரிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?

பாட்டாளிக்கு வேறுபட்டவனான கைவினைப் பணியாளன் என்று சொல்லப்படுபவன், கடந்த நூற்றாண்டு [18-ஆம் நூற்றாண்டு] வரையில் ஏறத்தாழ எங்கெங்கும் நிலவி வந்தவன். இப்போதுங்கூட அங்கும் இங்கும் நிலவுகின்றவன். அவன், அதிகப்பட்சம் தற்காலிகமாக, ஒரு பாட்டாளியாக இருக்கிறான். பிற தொழிலாளர்களைச் சுரண்டித் தனக்கென மூலதனத்தைச் சேர்த்துக் கொள்வதே அவனது குறிக்கோளாகும். கைவினைக் குழுமங்கள் (guilds) இன்னும் நிலவிவரும் சூழலிலும், கைவினைக் குழுமக் கட்டுப்பாடுகளிலிருந்து கிடைக்கும் சுதந்திரம், கைவினைத் தொழிலில் பட்டறைத் தொழில் பாணியிலான வழிமுறைகளைப் புகுத்தும் அளவுக்கோ அல்லது கடுமையான தொழில்போட்டிக்கோ இன்னும் இட்டுச் செல்லாத நிலையிலும், அவன் பெரும்பாலும் இந்தக் குறிக்கோளை எட்டவே செய்கிறான். ஆனால், கைவினைத் தொழிலில் பட்டறை அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, தொழில்போட்டி முழுமையாய்ச் செழுதோங்கியவுடனே இந்தக் கண்ணோட்டம் மங்கத் தொடங்கியது; கைவினைப் பணியாளன் மேலும் மேலும் பாட்டாளியாகப் பரிணமித்தான். எனவே, கைவினைப் பணியாளன் முதலாளியாக மாறுவதன் மூலமோ, அல்லது நடுத்தர வர்க்கத்தில் பொதுவாக நுழைவதன் மூலமோ, போட்டியின் காரணமாய் ஒரு பாட்டாளியாகப் பரிணமிப்பதன் மூலமோ (இதுவே தற்போது பெருமளவு நடைமுறையாய் உள்ளது) தன்னை விடுவித்துக் கொள்கிறான். மூன்றாவது வகைப்பட்டவன், ஏறத்தாழ கம்யூனிச இயக்கமாகவே நடந்துவரும் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதன்மூலம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலும்.[2]

(10) பாட்டாளிகள் பட்டறைத் தொழிலாளர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?

16-வது நூற்றாண்டு முதல் 18-வது நூற்றாண்டு வரையிலான காலகட்டம் முழுவதும் பட்டறைத் தொழிலாளி, சில விதிவிலக்குகள் தவிர, அவனது தறி, குடும்ப நூற்பு ராட்டினம், தனது ஓய்வு நேரத்தில் பயிர்செய்யும் சிறிய துண்டு நிலம் போன்ற ஏதேனும் ஓர் உற்பத்திக் கருவியைத் தன் சொந்த உடைமையாக வைத்திருந்தான். பாட்டாளியோ இவற்றில் எதையுமே வைத்திருக்கவில்லை.

பட்டறைத் தொழிலாளி கிட்டத்தட்ட எப்போதுமே நாட்டுப்புறத்தில், தனது நிலப்பிரபு அல்லது முதலாளியுடன் ஏறத்தாழ தந்தைமுறை உறவுநிலையில் வாழ்ந்து வருகிறான். பாட்டாளியோ பெரும்பாலும் பெருநகரங்களில் வாழ்கிறான். தன்னுடைய முதலாளியுடனான அவனது உறவு முற்றிலும் பண உறவே.

பட்டறைத் தொழிலாளி, பெருவீதத் தொழில்துறையால் அவனது தந்தைமுறை உறவுநிலையிலிருந்து பிரித்தெறியப்பட்டு, மிச்சம் மீதியிருந்த தன் சொத்துடைமைகளை இழக்கிறான். இவ்வாறாக அவன் ஒரு பாட்டாளியாக மாறுகிறான்.

(11) தொழில் புரட்சியினாலும், முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்ற வகையிலான சமுதாயப் பாகுபாட்டினாலும் ஏற்பட்ட உடனடி விளைவுகள் என்ன?

முதலாவதாக, எந்திர உழைப்பின் காரணமாக மிக மிக மலிவாகிப்போன தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள், உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பட்டறைத் தொழில் மற்றும் பிற தொழில்துறையின் பழைய உற்பத்திமுறையை உலகின் அனைத்து நாடுகளிலும் முழுமையாக அழித்தொழித்துவிட்டது.

இவ்வாறாக, அரை-அநாகரிக (semi-barbarian) நாடுகள் அனைத்தும் அவற்றின் தனிமை நிலையிலிருந்து பலவந்தமாக வெளிக்கொணரப்பட்டன. இதுநாள்வரையில் அவை வரலாற்று வளர்ச்சிப் போக்கிலிருந்து ஏறத்தாழத் துண்டிக்கப்பட்டிருந்தன். பட்டறைமுறை அடிப்படையிலான தொழில்துறையைக் கொண்டிருந்தன. அவை ஆங்கிலேயர்களின் மலிவான பண்டங்களை விலைக்கு வாங்கித் தமது சொந்த பட்டறைத் தொழிலாளர்களின் அழிவுக்கு இடமளித்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வளர்ச்சியின்றிக் கிடந்த நாடுகள் – எடுத்துக்காட்டாக, இந்தியா – முற்றிலும் புரட்சிகர மாற்றத்துக்கு உள்ளாயின. இப்போது சீனாவுங்கூட ஒரு புரட்சியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.

இங்கிலாந்தில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் எந்திரம் ஓராண்டு காலத்துக்குள் லட்சக்கணக்கான சீனத் தொழிலாளர்களின் அன்றாட உணவைச் சூறையாடும் ஒரு நிலைமைக்கு நாம் வந்து சேர்ந்துள்ளோம்.

இவ்வாறாக, பெருவீதத் தொழில்துறை இப்புவியின் அனைத்து மக்ககளையும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அனைத்து வட்டாரச் சந்தைகளையும் ஒருங்கிணைத்து ஒற்றை உலகச் சந்தையை உருவாக்கியுள்ளது. எங்கெங்கும் நாகரிகமும் முன்னேற்றமும் பரவ வழிவகுத்துள்ளது. இதன்மூலம் நாகரிகமடைந்த நாடுகளில் என்ன நிகழ்ந்தாலும், அது பிற நாடுகள் அனைத்திலும் பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதிலிருந்து அறியவருவது, இங்கிலாந்து அல்லது ஃபிரான்சு நாட்டிலுள்ள தொழிலாளர்கள் இப்போது தம்மை விடுவித்துக் கொள்வார்கள் எனில், அது இதர பிற நாடுகள் அனைத்திலும் புரட்சியைத் தொடங்கிவைக்கும். இந்தப் புரட்சிகள் விரைவிலோ அல்லது சற்றுப் பின்னரோ அந்தந்த நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையைப் பெற்றுத் தரும்.

இரண்டாவதாக, எங்கெல்லாம் பெருவீதத் தொழில்துறை பட்டறைத் தொழிலை இல்லாமல் செய்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம், செல்வத்திலும் அதிகாரத்திலும் ஆக உயர்ந்த நிலைக்கு வளர்ந்து, தன்னை நாட்டிலேயே முதன்மை வர்க்கமாக ஆக்கிக் கொண்டது. இதன் விளைவு என்னவெனில், எங்கெல்லாம் இது நிகழ்ந்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் அரசியல் அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டது. இதுகாறும் இருந்துவந்த ஆளும் வர்க்கங்களான பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள் மற்றும் இவர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட வரம்பிலா முடியாட்சியையும் ஒழித்துக் கட்டியது.

நிலச்சொத்தின் நிரந்தர உடைமைகளை ஒழித்ததன் மூலமும், வேறு சொற்களில் கூறுவதெனில் நிலச்சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உட்படுத்தியதன் மூலமும், பிரபுக்குலத்தின் சிறப்புச் சலுகைகளைப் பறித்துக் கொண்டதன் மூலமும், முதலாளித்துவ வர்க்கம் உயர்குடியினர், பிரபுக்குலத்தினரின் ஆட்சி அதிகாரத்தைப் பூண்டோடு அழித்தொழித்தது. கைவினைக் குழுமங்களையும், கைவினைஞரின் சலுகைகளையும் ஒழித்துக்கட்டியதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களின் அதிகாரத்தை அழித்தொழித்தது. அவற்றின் இடத்தில் தொழிற்போட்டியை இடம்பெறச் செய்தது. அதாவது, தொழில்துறையின் எந்தப் பிரிவிலும் ஈடுபட ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ள, தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் இல்லை என்பது தவிர வேறெந்தத் தடங்கலும் இல்லாத ஒரு சமுதாய அமைப்புமுறையை இடம்பெறச் செய்தது.

இவ்வாறு, கட்டற்ற போட்டியை அறிமுகப்படுத்தியதானது, இப்போது முதற்கொண்டு சமுதாயத்தின் உறுப்பினர்கள் அவர்களது மூலதனம் சமமற்றது என்ற அளவுக்கு மட்டுமே சமமற்றவர்கள் எனவும், மூலதனமே தீர்மானகரமான சக்தி எனவும், இதனால் முதலாளிகள் அதாவது முதலாளித்துவ வர்க்கம் சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாக ஆகிவிட்டது எனவும் அறிவிக்கின்ற ஒரு பகிரங்கப் பிரகடனம் ஆகும்.

பெருவீதத் தொழில்துறையை நிறுவுவதற்குக் கட்டற்ற போட்டி அவசியம். ஏனெனில் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சிக்குரிய சமுதாய நிலைமை அது மட்டுமே. முதலாளித்துவ வர்க்கமானது, பிரபுக்குலம் மற்றும் கைவினைக் குழும எஜமானர்களின் சமூக அதிகாரத்தை அழித்தபின், அவர்களது அரசியல் அதிகாரத்தையும் அழித்தொழித்தது. முதலாளித்துவ வர்க்கம், சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாகத் தன்னை உயர்த்திக் கொண்டபின், அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கமாகவும் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்டத்தின் முன் முதலாளித்துவ சமத்துவம், கட்டற்ற போட்டிக்கு அங்கீகாரம் ஆகியவற்றைச் சார்ந்து நிற்கிற பிரதிநிதித்துவ அமைப்பு முறையை நிறுவியதன் மூலம் இதனைச் சாதித்தது. இது ஐரோப்பிய நாடுகளில் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட முடியாட்சி வடிவத்தில் அமைந்தது. அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட இந்த முடியாட்சிகளில் ஓரளவு மூலதனம் வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதாவது முதலாளித்துவ வர்க்க உறுப்பினர்கள் மட்டுமே வாக்காளர்கள் ஆவார்கள். இந்த முதலாளித்துவ வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த முதலாளித்துவப் பிரதிநிதிகள் வரிகளுக்கு எதிராய் வாக்களிக்கும் உரிமை வாயிலாக, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மூன்றாவதாக, எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தோடு கூடவே பாட்டாளி வர்க்கமும் படிப்படியாய் வளர்ச்சி பெற்றது. முதலாளித்துவ வர்க்கம் செல்வத்தில் வளர்ச்சி பெற்ற அதே அளவுக்குப் பாட்டாளிகள் எண்ணிக்கையில் அதிகரித்தனர். பாட்டாளிகளை மூலதனம் மூலம் மட்டுமே வேலைக்கு அமர்த்த முடியும், உழைப்பை வேலைக்கு அமர்த்துவதால் மட்டுமே மூலதனம் அதிகரிக்க முடியும். இந்தக் காரணங்களினாலேயே மூலதன வளர்ச்சியுடன் கூடவே துல்லியமாக அதே வேகத்தில் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியும் பின்தொடரும் என்பது புலனாகிறது.

இந்த நிகழ்ச்சிப் போக்கு, ஏககாலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்தினரையும் பெருநகரங்களில் ஒன்றாகக் கொண்டுவந்து சேர்க்கிறது. இங்குதான் தொழில்களை மிகவும் லாபகரமான முறையில் நடத்த முடியும். இவ்வாறு மிகப்பெரும் மக்கள் திரளை ஒரே இடத்தில் ஒன்று குவிப்பதானது, பாட்டாளி வர்க்கத்தினர்க்கு அவர்களின் சொந்த வலிமை குறித்த உணர்வினை நல்குகிறது.

இதற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சிப் போக்கு மேலும் முன்னேறிச் செல்லும்போது, உடல் உழைப்பைச் சிக்கனப்படுத்தும் புதிய எந்திரங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டுபிடிக்கப் படுகின்றனவோ அந்த அளவு அதிகமாகப் பெருவீதத் தொழில்துறை கூலியைக் குறைப்பதில் முனைப்புக் காட்டும். நாம் அறிந்தவாறே, கூலி அதன் மிகக் குறைந்தபட்ச அளவைத் தொடும். அதனைத் தொடர்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை மென்மேலும் சகிக்க முடியாத அளவுக்குத் தாழ்ந்து போகும். இவ்வாறாக, பாட்டாளி வர்க்கத்தின் பெருகிவரும் அதிருப்தியுடன் சேர்ந்து, ஒரு பாட்டாளி வர்க்கச் சமூகப் புரட்சிக்குத் தயார்ப்படுத்துவதற்கான அதன் வல்லமையும் அதிகரிக்கிறது.

(12) தொழில் புரட்சியின் இதற்கும் மேலான விளைவுகள் எவை?

தொழில்துறை உற்பத்தியை முடிவில்லாமல் விரிவுபடுத்தவும், வேகப்படுத்தவும், உற்பத்தி செலவைக் குறைக்கவும் பயன்படும் சாதனங்களை நீராவி எஞ்சின் மற்றும் பிற எந்திரங்களின் உருவிலே பெருவீதத் தொழில்துறை உருவாக்கியது. இவ்வாறு வாய்ப்பு வசதிபெற்ற உற்பத்தியோடு, பெருவீதத் தொழில்துறையிலிருந்து பிரிக்க முடியாத நிச்சய விளைவான கட்டற்ற போட்டி மிகவும் தீவிர வடிவங்களை எடுத்தது. பெருந்தொகையான முதலாளிகள் தொழில்துறையில் படையெடுத்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே தேவைக்கும் அதிகமான அளவுக்கு உற்பத்தி பெருகியது.

இதன்விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விற்பனை செய்ய இயலவில்லை. வணிக நெருக்கடி என்று சொல்லப்படும் பிரச்சினை வெடித்தது. ஆலைகளை மூட வேண்டியதாயிற்று. அவற்றின் உரிமையாளர்கள் திவாலாயினர். தொழிலாளர்கள் சோற்றுக்கு வழியின்றிப் பட்டினி கிடந்தனர். எங்கெங்கும் சொல்லொணாத் துயரம் கோலோச்சியது.

சில காலத்துக்குப் பின் தேங்கிக் கிடந்த பொருட்கள் விற்பனை ஆயின. ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. கூலிகள் உயர்ந்தன. படிப்படியாக வணிகம் முன் எப்போதையும்விடச் செழித்தோங்கியது.

ஆனால் மீண்டும் குறுகிய காலத்துக்குள்ளேயே அளவுக்கு அதிகமான பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு புதிய நெருக்கடி வெடித்தது. முந்திய நெருக்கடியின் போக்கிலேயே இதுவும் சென்றது.

இந்த [19-ஆம்] நூற்றாண்டு தொடங்கிய காலந்தொட்டே தொழில்துறையின் நிலைமை, செழிப்பான காலகட்டங்களுக்கும் நெருக்கடியான காலகட்டங்களுக்கும் இடையே தொடர்ந்து ஊசலாடிக் கொண்டேதான் இருந்தது. ஏறத்தாழ ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய நெருக்கடி இடைமறித்தது. இந்த நெருக்கடிகள் தொழிலாளர்களுக்கு எப்போதும் கடுந்துயரைக் கொடுப்பதாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, அவை எப்போதும் பொதுவான புரட்சிகர எழுச்சியுணர்வுகளையும், நிலவிவரும் சமுதாயக் கட்டமைப்பு முழுமைக்குமான நேரடி அபாயத்தையும் தம்முடன் சேர்த்தே கொண்டு வந்தன.

(13) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நிகழும் இத்தகைய வணிக நெருக்கடிகளில் இருந்து பெறக்கூடிய முடிவுகள் எவை?

முதலாவது:

பெருவீதத் தொழில்துறை தனது வளர்ச்சியின் மிகமிகத் தொடக்கக் காலகட்டத்தில் கட்டற்ற போட்டியை உருவாக்கிய போதிலும், அது [பெருவீதத் தொழில்துறை] இப்போது கட்டற்ற போட்டியையும் விஞ்சி நிற்கிறது;

இந்தப் போட்டி மற்றும் பொதுவாகத் தனித்துவமான உற்பத்தி அமைப்பு ஆகியவை பெருவீதத் தொழில்துறைக்கு ஒரு தளையாகி விட்டன. இந்தத் தளையை அது கட்டாயம் தகர்க்க வேண்டும், தகர்க்கும்.

பெருவீதத் தொழில்துறை இப்போதுள்ள அடிப்படையில் தொடர்ந்து இருந்துவரும் காலம்வரை, ஒவ்வொரு ஏழாண்டுகளிலும் [தொழில்துறை நெருக்கடி வடிவில்] நிகழுகின்ற பொதுக் குழப்படிக்கான விலையைத் தந்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அத்தகைய நெருக்கடி நிகழும் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த நாகரிகச் சமுதாயத்தையே அச்சுறுத்துகின்றது. மேலும், பாட்டாளிகளைத் துயரத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பகுதியையும் சீரழிக்கின்றது.

எனவே, பெருவீதத் தொழில்துறையையே கைவிட வேண்டும், இது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும். இதற்கு மாற்றாக, இச்சூழ்நிலை முற்றிலும் ஒரு புதிய சமுதாயக் கட்டமைப்பைத் தவிர்க்கவியலா அவசியம் ஆக்குகிறது. இப்புதிய சமுதாய அமைப்பில், பரஸ்பரம் போட்டியிடும் தனிப்பட்ட தொழிலதிபர்கள் உற்பத்தியை நெறிப்படுத்த மாட்டார்கள். பதிலாக, ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மக்கள் அனைவரின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒட்டுமொத்தச் சமுதாயமே உற்பத்தியை முறைப்படுத்தும்.

இரண்டாவது:

பெருவீதத் தொழில்துறையும் அதனால் சாத்தியமாக்கப்பட்ட உற்பத்தியின் எல்லையிலா விரிவாக்கமும், ஒரு புதிய சமூக அமைப்புமுறையைக் கைக்கெட்டும் தொலைவில் கொண்டுவந்துள்ளது. அப்புதிய அமைப்புமுறையில் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனது சகல சக்திகளையும் ஆற்றல்களையும் பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்தவும் மேம்படுத்தவுமான ஒரு நிலையில் இருப்பர். அந்த அளவுக்கு அதிகமான உற்பத்தி அங்கு இருக்கும்.

இவ்வாறு, நமது இன்றைய கால சமுதாயத்தில் துன்பங்களையும் நெருக்கடிகளையும் விளைவிக்கின்ற பெருவீதத் தொழில்துறையின் அதே பண்புகள்தாம் வேறுபட்ட வடிவிலான ஒரு சமுதாய அமைப்பின்கீழ் இந்தத் துன்பங்களையும் பேரிடரான துயரங்களையும் அழித்தொழிக்கும் என்பது புலனாகிறது.

தெள்ளத்தெளிவாக நாம் காண்பதாவது:

(1) இன்றைய எதார்த்த நிலைமையின் தேவைப்பாடுகளுக்கு இனிமேலும் ஒவ்வாதென ஆகிப்போன இந்தச் சமூக அமைப்புமுறை மட்டுமே மேற்கண்ட கேடுகளுக்கெல்லாம் காரணம் என இப்போது முதற்கொண்டு சாற்றிக் கூற முடியும்; மேலும்,

(2) ஒரு புதிய சமூக அமைப்புமுறை மூலமாக இந்தக் கேடுகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும்.

(14) இந்தப் புதிய சமூக அமைப்புமுறை எந்த வகைப்பட்டதாக இருக்கும்?

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் புதிய சமூக அமைப்புமுறை, பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்ளும் தனிநபர்களின் கைகளிலிருந்து, தொழில்துறையின் கட்டுப்பாட்டையும் உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் எடுத்துக் கொள்ளும். பதிலாக, பொருளுற்பத்தியின் இந்தப் பிரிவுகள் அனைத்தையும் ஒட்டுமொத்த சமுதாயமே நிர்வகிக்கின்ற ஓர் அமைப்புமுறையினை, சமுதாயம் முழுமைக்காகவும், ஒரு பொதுத் திட்டத்தின்படியும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடனும் நிறுவும்.

வேறு வகையில் கூறுவதெனில், அது போட்டியை ஒழித்து அதனிடத்தில் ஒத்துழைப்பை நிலைநாட்டும்.

மேலும், தொழில்துறையின் நிர்வாகம் தனிநபர்கள் கையில் இருப்பது, தவிர்க்க முடியாதபடி தனியார் சொத்துடைமைக்கு இட்டுச் செல்கிறது. போட்டி என்பது நடைமுறையில் வெறுமனே, தனியார் சொத்துடைமையாளர்களின் கட்டுப்பாட்டில் தொழில்துறை இருப்பதன் தன்மையும் வடிவமுமே ஆகும். ஆக, போட்டியிலிருந்தும், தொழில்துறையின் தனிநபர் மேலாண்மையிலிருந்தும் தனியார் சொத்துடைமையைப் பிரிக்க முடியாது என்பது இதிலிருந்து புலனாகும். எனவே, தனியார் சொத்துடைமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, உற்பத்திக் கருவிகள் அனைத்தும் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் பொது உடன்பாட்டின்படி வினியோகிக்கப்பட வேண்டும். சுருக்கமாக இது ’உற்பத்திப் பொருட்களின் மீதான கூட்டு உடைமை’ என்று அழைக்கப்படுகிறது.

உண்மையில், தனியார் சொத்துடைமை ஒழிப்பு என்பது, ஐயத்துக்கு இடமின்றி, தொழில்துறை வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவான, ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறையில் ஏற்படும் புரட்சியை விவரிக்க மிகச் சுருக்கமான, மிகவும் குறிப்பிடத்தக்கதொரு வழிமுறை ஆகும். இந்தக் காரணத்தால்தான், மிகச்சரியாகவே கம்யூனிஸ்டுகள் தங்களின் முதன்மையான கோரிக்கையாகத் தனியார் சொத்துடைமை ஒழிப்பை முன்வைக்கின்றனர்.

(15) தனியார் சொத்துடைமை ஒழிப்பு முந்தைய காலகட்டத்தில் சாத்தியமானதாக இருக்கவில்லையா?

இருக்கவில்லை. சமூக அமைப்புமுறையில் ஒவ்வொரு மாற்றமும், சொத்துடைமை உறவுகளில் ஏற்படும் ஒவ்வொரு புரட்சியும், புதிய உற்பத்திச் சக்திகளின் உருவாக்கத்தினால் ஏற்படும் கட்டாய விளைவே ஆகும். புதிய உற்பத்தி சக்திகள் பழைய சொத்துடைமை உறவுகளுடன் இனிமேலும் ஒத்துப் போகா.

தனியார் சொத்துடைமை என்றென்றும் நிலவியிருக்கவில்லை.

மத்திய காலப்பகுதியின் இறுதியில் ஒரு புதிய உற்பத்தி முறை அதாவது பட்டறை உற்பத்தி முறை புகுத்தப்பட்டது. பழைய சொத்துடைமை உறவுகளையும் மிஞ்சி அது வளர்ச்சி பெற்றது. அன்று நிலவிவந்த நிலப்பிரபுத்துவ, கைவினைக் குழும வடிவிலான சொத்துடைமை அமைப்பின்கீழ் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில், அது தனியார் சொத்துடைமை என்னும் ஒரு புதிய சொத்துடைமை வடிவத்தைப் படைத்தது. பட்டறைத் தொழில் அமைப்பிலும், பெருவீதத் தொழில்துறை வளர்ச்சியின் மிகத் தொடக்கக் கட்டத்திலும் தனியார் சொத்துடைமை மட்டுமே சாத்தியமான சொத்துடைமை வடிவமாக இருந்தது; தனியார் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்புமுறை மட்டுமே சாத்தியமான சமூக அமைப்புமுறையாக இருந்தது.

எல்லோருக்கும் போதுமான அளவுக்கு கிடைத்தது போக, சமூக மூலதனத்தை விரிவாக்கவும், உற்பத்தி சக்திகளைப் பெருக்கவும் பெருஞ்செல்வம் மீந்திடும் அளவுக்கு இதுநாள் வரையில் உற்பத்தி செய்ய முடிந்ததில்லை. அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாத காலம்வரை, சமுதாயத்தினுடைய உற்பத்தி சக்திகளின் பயன்பாட்டை நெறிப்படுத்தும் ஓர் ஆளும் வர்க்கமும், ஏழ்மையான ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இருந்தே தீரும். இந்த வர்க்கங்கள் எவ்வாறு அமைகின்றன என்பது உற்பத்தியின் வளர்ச்சிக் கட்டத்தைப் பொறுத்ததாகும்.

விவசாயத்தைச் சார்ந்துநின்ற மத்திய காலப்பகுதி நமக்கு நிலப்பிரபுவையும் பண்ணை அடிமையையும் வழங்கியது. மத்திய காலகட்டத்தின் பிந்தைய பகுதி கைவினைக் குழும எஜமானனையும், கைவினைப் பயிற்சியாளனையும், நாள்கூலித் தொழிலாளியையும் நமக்குக் காட்டியது. பதினேழாம் நூற்றாண்டு பட்டறை அதிபர்களையும் பட்டறைத் தொழிலாளர்களையும் கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டோ பெரிய தொழிற்சாலை உடைமையாளர்களையும் பாட்டாளிகளையும் கொண்டுள்ளது.

இதுநாள்வரையில் உற்பத்தி சக்திகள், அனைவருக்கும் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யும் நிலைக்கு ஒருபோதும் வளர்ச்சி அடையவில்லை என்பது கண்கூடு. தனியார் சொத்துடைமை, உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு ஒரு தளையாகவும் தடைக்கல்லாகவும் ஆகிவிட்டது.

ஆயினும் இப்போது, பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியானது, ஒரு புதிய காலகட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மூலதனமும் உற்பத்தி சக்திகளும் முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்துக்குள் அவற்றை வரம்பிலா அளவுக்குப் பெருக்கிட உற்பத்தி சாதனங்கள் கைவசம் உள்ளன. அதுமட்டுமின்றி, உற்பத்தி சக்திகள் மிகச்சில முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ள அதே வேளையில் மாபெரும் திரளான மக்கள் மேலும் மேலும் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். முதலாளிகளின் செல்வச் செழிப்பு அதிகரித்துவரும் அதே வேகத்தில் பாட்டாளி மக்களின் நிலைமை மென்மேலும் அவலம் மிகுந்ததாகவும், தாங்கவொண்ணாததாகவும் ஆகிவருகிறது. முடிவாக, எளிதில் விரிவாக்கத் தக்கதும் வலிமை மிக்கதுமான இந்த உற்பத்தி சக்திகள், தற்போதைக்குத் தனியார் சொத்துடைமையையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் மிஞ்சி வளர்ந்துள்ளன. அவை எந்த நேரத்திலும் சமூக அமைப்புமுறையையே குலைக்கும் கொடூரமான குழப்பங்களைக் கட்டவிழ்த்துவிட காத்துக் கொண்டுள்ளன. இந்த நிலைமைகளில் தனியார் சொத்துடைமையை ஒழிப்பது இப்போது சாத்தியமாகிவிட்டது மட்டுமின்றி முற்றிலும் அவசியமும் ஆகிவிட்டது.

(16) தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா?

தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.

ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்.

(17) தனியார் சொத்துடைமையை ஒரே அடியில் ஒழித்துக் கட்டுவது சாத்தியமா?

இல்லை. ஒரு பொதுவான கூட்டுச் சமுதாயத்தை உருவாக்கத் தேவையான அளவுக்கு இப்போது நிலவும் உற்பத்தி சக்திகளை ஒரேயடியாகப் பெருக்குவது எவ்வாறு சாத்தியமில்லையோ அதுபோலவே இதுவும் சாத்தியமில்லை.

பாட்டாளி வர்க்கப் புரட்சி, இன்று நிலவும் சமுதாயத்தைப் படிப்படியாக மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், போதுமான அளவில் உற்பத்திச் சாதனங்கள் கைவசம் இருக்கும்போது மட்டுமே அதனால் தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்ட இயலும்.

(18) இந்தப் புரட்சியின் திசைவழி எதுவாக இருக்கும்?

எல்லாவற்றுக்கும் மேலாக, அது ஒரு ஜனநாயக அரசமைப்பை நிறுவும். இதன்மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தை நிறுவும். பாட்டாளி வர்க்கம் மக்களில் பெரும்பான்மையாக ஏற்கெனவே இருக்கின்ற இங்கிலாந்தில் நேரடியாகவே இதனை நிறைவேற்றும். பெரும்பான்மை மக்களிடையே பாட்டாளிகள் மட்டுமின்றி, சிறு விவசாயிகள் மற்றும் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினரும் அங்கம் வகிக்கும் ஜெர்மனியிலும் ஃபிரான்சிலும் மறைமுகமாக இதனை நிறைவேற்றும். அங்கெல்லாம் இந்த வர்க்கத்தினர் மெல்ல மெல்ல பாட்டாளி வர்க்கத்துக்குள் வந்து விழுகின்ற நிலையில் இருக்கின்றனர். தங்களது அரசியல் நலன்கள் அனைத்துக்கும் மென்மேலும் மிகுதியாக பாட்டாளி வர்க்கத்தையே சார்ந்து நிற்கின்றனர். எனவே விரைவில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி வருவார்கள். அனேகமாக இது இரண்டாவது போராட்டத்துக்கு வழிவகுக்கலாம். எனினும், அதன் இறுதி முடிவு பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியாக மட்டுமே இருக்க முடியும்.

ஜனநாயகம் என்பது, தனியார் சொத்துடைமைக்கு எதிராகக் குறிவைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக, உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், ஜனநாயகம் பாட்டாளி வர்க்கத்துக்கு முற்றிலும் மதிப்பற்றதாகிவிடும். இப்போது நிலவும் உறவுகளின் தவிர்க்கவியலாத பின்விளைவாக வெளிப்படுகின்ற முதன்மையான நடவடிக்கைகள் பின்வருமாறு:

(1) படிப்படியாக அதிகரிக்கும் வருமான வரிவிதிப்பு, மரபுரிமைச் சொத்து மீது உயர் வரிகள், கிளைவழிவந்தோர் (சகோதரர், சகோதர சகோதரிகளின் புதல்வர்கள் போன்றோர்) மரபுரிமை பெறுவதை ஒழித்தல், கட்டாயக் கடன்கள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தனியார் சொத்துடைமையைக் கட்டுப்படுத்தல்.

(2) ஓரளவு அரசுத் தொழில்துறையினால் தோற்றுவிக்கும் போட்டி மூலமும், ஓரளவு நேரடியாக சேமிப்புப் பத்திரங்கள் வடிவில் இழப்பீடு வழங்கியும், நில உடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ரயில்வே மற்றும் கப்பல் கம்பெனி அதிபர்கள் ஆகியோரைப் படிப்படியாகச் சொத்துடைமையிலிருந்து விடுவித்தல்.

(3) நாட்டைவிட்டு வெளியேறியோர், பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கலகக்காரர்கள் ஆகியோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்தல்.

(4) மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலும், தொழிற்சாலைகளிலும், பணிமனைகளிலும் பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்தி உழைப்பை ஒழுங்கமைத்தல். இதன்மூலம் தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டிக்கு முடிவுகட்டுதல். ஒருசில தொழிற்சாலை உடைமையாளர்கள் மீதம் இருப்பின், அரசு கொடுக்கும் அதே அளவு உயர்ந்த கூலியைத் தருவதற்கு அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தல்.

(5) தனியார் சொத்துடைமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரை சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என்னும் சமப்பொறுப்புக்கு உள்ளாக்குதல். தொழில்துறைப் பாதுகாப்புப் படைகளைக் குறிப்பாக விவசாயத்துக்காக நிறுவுதல்.

(6) அரசு மூலதனத்தைக் கொண்ட ஒரு தேசிய வங்கி மூலம், பணம் மற்றும் கடன் அமைப்புகளை அரசின் கைகளில் மையப்படுத்தல். அனைத்துத் தனியார் வங்கிகள், வங்கி அதிபர்களைக் கட்டுப்படுத்தல்.

(7) தேசியத் தொழிற்சாலைகள், பணிமனைகள், ரயில்பாதைகள், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அதிகரித்தல்; தரிசு நிலங்களைப் பண்படுத்திச் சாகுபடி செய்தல், ஏற்கெனவே சாகுபடி செய்யும் நிலங்களை மேம்படுத்தல் – இவையனைத்தையும், தேசத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு வரும் மூலதனம் மற்றும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கேற்ற விகிதத்தில் செய்தல்.

(8) தாயின் பராமரிப்பில் இருந்து விடுபடக்கூடிய வயதுவந்த எல்லாக் குழந்தைகளுக்கும் தேசியக் கல்வி நிறுவனங்களில், தேசத்தின் செலவில் கல்வி வழங்குதல். கல்வியைப் பொருள் உற்பத்தியோடு இணைத்தல்.

(9) தொழில்துறையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள குடிமக்களின் குழுக்களுக்கு, அரசின் பொது நிலங்களில் கூட்டு வசிப்பிடங்களாகப் மிகப்பெரும் குடியிருப்புகளைக் கட்டுதல். நாட்டுப்புற நகரப்புற நிலைமைகளின் சாதகமான கூறுகளை அவர்களின் வாழ்க்கை முறையில் ஒன்றிணைத்தல். அதே வேளையில் அவையிரண்டின் ஒருசார்புத் தன்மை மற்றும் பாதகமான கூறுகளைத் தவிர்த்தல்.

(10) நகர்ப்புற மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சுகாதாரமற்ற, தரமற்ற வசிப்பிடங்களை இடித்துத் தகர்த்தல்.

(11) முறையான திருமண வாழ்வில் பிறந்த குழந்தைகளுக்கும், அவ்வாறின்றிப் பிறந்த குழந்தைகளுக்கும் சமமான மரபுவழிச் சொத்துரிமை வழங்குதல்.

(12) அனைத்துப் போக்குவரத்து சாதனங்களையும் தேசத்தின் உடைமையாக மையப்படுத்தல்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்பது உண்மையே. ஆனால் ஒருசெயல் எப்போதும் இன்னொரு செயலுக்கு இட்டுச் செல்லும். தனியார் சொத்துடைமை மீது முதல் தீவிரத் தாக்குதல் தொடுக்கப்பட்டவுடன் பாட்டாளி வர்க்கம் மேலும் முன்னே செல்ல உந்தப்படுவதை உணரும். சகல மூலதனத்தையும், விவசாயத் தொழில் முழுவதையும், அனைத்துப் போக்குவரத்துச் சாதனங்களையும், வணிகப் பரிவர்த்தனை முழுவதையும் அரசின் கைகளில் மேலும் மேலும் மையப்படுத்த முனைப்புக் காட்டும். மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த முடிவினை நோக்கியே நெறிப்படுத்தப்படும். இத்தகைய நடவடிக்கைகள் செயல்படுத்த இயன்றவையாகவும், ஏதுவானவையாகவும் ஆகிவிடும். பாட்டாளி வர்க்கம் தமது உழைப்பின்மூலம் நாட்டின் உற்பத்தி சக்திகளைப் பன்மடங்காகப் பெருக்கும் அதே அளவுக்குத் துல்லியமாக, அவற்றின் மையப்படுத்தும் ஆற்றலை வெளிக்காட்டும் திறன்கொண்டதாகவும் இருக்கும்.

இறுதியாக, அனைத்து மூலதனத்தையும், அனைத்து உற்பத்தியையும், அனைத்துப் பரிவர்த்தனையையும் ஒன்றாகத் தேசத்தின் கைகளில் ஒருமுகப்படுத்தும்போது, தனியார் சொத்துடைமை தானாகவே மறைந்து போய்விடும். பணம் தேவையற்றதாகி விடும். சமுதாயம் தனது மிச்சம் மீதியிருக்கும் பழைய பொருளாதாரப் பண்புகளை உதறித் தள்ளும் திறன் பெற்றிருக்கும். உற்பத்தி அந்த அளவுக்கு அதகரித்திருக்கும். மனிதர்கள் அந்த அளவுக்கு மாற்றம் அடைந்திருப்பார்கள்.

(19) இந்தப் புரட்சி ஒருநாட்டில் மட்டும் நடைபெறுவது சாத்தியமா?

இல்லை. உலகச் சந்தையை உருவாக்கியதன் மூலம், பெருவீதத் தொழில்துறை ஏற்கெனவே புவியின் மக்களினம் அனைத்தையும், குறிப்பாக நாகரிகமடைந்த மக்களினம் அனைத்தையும் ஒன்றோடொன்றை, மற்றவர்க்கு என்ன நேர்ந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து எவரும் ஒதுங்கியிருக்க முடியாது என்ற அளவுக்கு நெருக்கமாகப் பிணைத்திருக்கிறது.

மேலும், பெருவீதத் தொழில்துறை நாகரிகமடைந்த நாடுகளின் சமூக மேம்பாட்டை பெருமளவுக்கு ஒருங்கிணைத்துள்ளது. எந்த அளவுக்கு எனில், இந்த நாடுகள் அனைத்திலும், முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் தீர்மானகரமான வர்க்கங்களாகி விட்டன, அவற்றுக்கு இடையிலான போராட்டமே இன்றைய காலகட்டத்தின் மாபெரும் போராட்டமாகி விட்டது. எனவே, கம்யூனிசப் புரட்சி வெறுமனே ஒரு தேசிய நிகழ்வாக மட்டும் இருக்காது, அது நாகரிகமடைந்த நாடுகள் அனைத்திலும் ஏக காலத்தில் நிகழும். அதாவது குறைந்த பட்சம் இங்கிலாந்து அமெரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏக காலத்தில் நிகழும்.

இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும், மிகவும் வளர்ச்சியடைந்த தொழில்துறை, மிகப்பெரும் செல்வவளம், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உற்பத்தி சக்திகள் ஆகியவை இருப்பதைப் பொறுத்து, அதற்கேற்ப அந்தந்த நாடுகளில் மிகுந்த அல்லது குறைந்த வேகத்தில் இப்புரட்சி வளர்ச்சி பெறும். எனவே, ஜெர்மனியில் இது மிக மெதுவாக நடக்கும்; அதிகப்படியான தடைகளைச் சந்திக்கும். இங்கிலாந்தில் இது மிக வேகமாக, மிகக் குறைந்த இடர்ப்பாடுகளுடன் நிறைவேறும். அது உலகின் பிற நாடுகள்மீது சக்திமிக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றின் வளர்ச்சி வேகத்தை மிகுதியாய் முடுக்கிவிடுவதுடன், இதுகாறும் அந்நாடுகள் பின்பற்றிவந்த வளர்ச்சிப் போக்கின் திசையை முற்றிலுமாய் மாற்றியமைக்கும்.

இது ஓர் உலகளாவிய புரட்சியாகும். அதன்படியே, அது உலகளாவிய வரம்பெல்லையையே கொண்டிருக்கும்.

(20) தனியார் சொத்துடைமை முடிவாக மறைந்துபோவதால் ஏற்படும் பின்விளைவுகள் எவை?

அனைத்து உற்பத்தி சக்திகளையும், வணிக சாதனங்களையும், உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மற்றும் வினியோகத்தையும்கூட, தனியார் முதலாளிகளின் கைகளிலிருந்து சமுதாயமே எடுத்துக் கொள்ளும். இருக்கின்ற வள ஆதாரங்கள், சமுதாயம் முழுவதன் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி, சமுதாயம் அவற்றை மேலாண்மை செய்யும். இந்த வகையில், எல்லாவற்றுக்கும் அதிமுக்கியமாய், தற்போது பெருவீதத் தொழில்துறையையோடு தொடர்புடையதாய் இருக்கும் கேடான விளைவுகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும்.

இனிமேல் வணிக நெருக்கடிகள் இல்லாமல் போகும். விரிவாக்கப்பட்ட உற்பத்தி, இப்போதைய சமூக அமைப்புமுறையில் மிதமிஞ்சியதாய் ஆகி, துன்பங்கெளுக்கெல்லாம் முதன்மையான காரணமாய் விளங்குகிறது. அதுவே பின்னால் பற்றாக்குறையாய் ஆகி, மேலும் விரிவாக்க வேண்டிய தேவைக்கு உள்ளாகிறது. [புதிய சமூக அமைப்புமுறையில்] மிதமிஞ்சிய உற்பத்தி, துன்பங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, சமுதாயத்தின் அடிப்படைத் தேவைப்பாடுகளுக்கும் அப்பால், மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தேவைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்யும். புதிய தேவைகளை உருவாக்கும். அதே வேளையில் அவற்றை நிறைவேற்றுவதற்கான சாதனங்களையும் உருவாக்கும். புதிய முன்னேற்றத்துக்கான நிபந்தனையாகவும் தூண்டுகோலாகவும் ஆகிப்போகும். முன்னேற்றமானது கடந்த காலத்தில் எப்போதும் செய்ததுபோல, சமூக அமைப்புமுறை முழுவதயும் குழப்பத்தில் ஆழ்த்திவிடாது. பெருவீதத் தொழில்துறை, தனியார் சொத்துடைமையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, மாபெரும் விரிவாக்கத்துக்கு உள்ளாகும். எந்த அளவுக்கு எனில், நம் காலத்தின் பெருவீதத் தொழில்துறையுடன் ஒப்பிடுகையில் பட்டறைத் தொழில் அற்பமாகத் தோன்றியதைப்போல், இப்போது நாம் காணும் பெருவீதத் தொழில்துறை, ஒப்பீட்டளவில் அற்பமாகத் தோன்றும் அளவுக்கு விரிவடையும். தொழில்துறையின் இந்த வளர்ச்சி, மக்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவுசெய்யப் போதுமான அளவுக்கு எராளமான உற்பத்திப் பொருட்கள் சமுதாயத்துக்குக் கிடைக்குமாறு செய்யும்.

விவசாயத் துறைக்கும் இந்த உண்மை பொருந்தும். விவசாயமும் தனியார் சொத்துடைமையின் தாக்கத்துக்கு ஆளாகிப் பாதிப்புக்கு உள்ளானது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டதால் பின்னடைவைச் சந்தித்தது. புதிய சமூக அமைப்பில் தற்போதைய முன்னேற்றங்களும் விஞ்ஞானச் செயல்முறைகளும் நடைமுறைப்படுத்தப்படும். அதன் விளைவாக [விவசாய வளர்ச்சியில்] ஏற்படும் முன்னோக்கிய பாய்ச்சலினால் சமுதாயத்துக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் [குறைவின்றிக் கிடைக்க] உறுதி செய்யப்படும்.

இவ்வாறாக, [புதிய சமூக அமைப்பில் உற்பத்தி செய்யப்படும்] அபரிதமான பண்டங்களினால் சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும்.

பரஸ்பரம் பகைமை பாராட்டும் பல்வேறு வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுறுவது இதனால் தேவையற்றதாகிவிடும். மேலும், புதிய சமூக அமைப்பில் இது தேவையற்றது மட்டுமல்ல, ஏற்கவொண்ணாததாகவும் ஆகிவிடும். உழைப்புப் பிரிவினையிலிருந்தே வர்க்கங்கள் தோன்றின. இன்றைய நாள்வரை அறியப்பட்டு வந்த இந்த உழைப்புப் பிரிவினை புதிய சமூக அமைப்பில் முற்றாக மறைந்துவிடும். நாம் விளக்கிக் கூறிய அளவுக்குத் தொழில்துறை மற்றும் விவசாயத்தின் உற்பத்தியை அதிகரிக்க தற்போதுள்ள எந்திரவியல், வேதியியல் செயல்முறைகள் போதுமானதாக இல்லை. எனவே அத்தகைய செயல்முறைகளைப் பயன்படுத்தும் மனிதர்களின் திறப்பாடுகள் அதற்கேற்றவாறு வளர்ச்சி காண வேண்டும்.

கடந்த [18-வது] நூற்றாண்டின் விவசாயிகளும் பட்டறைத் தொழிலாளர்களும் பெருவீதத் தொழில்துறைக்குள் ஈர்க்கப்பட்டபோது தமது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட மக்களாய் மாறிப் போயினர். அதுபோலவே, உற்பத்தி மீதான ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கூட்டு நிர்வாகம், அதன் விளைவாக ஏற்படும் புதிய வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும் முற்றிலும் வேறு வகைப்பட்ட புதிய மக்கள் சக்தி தேவைப்படுகின்றது.

மக்கள், உற்பத்தியின் தனியொரு பிரிவுக்கென ஒதுக்கப்பட்டு, அதிலேயே பிணைக்கப்பட்டு, அதனால் சுரண்டப்பட்டு, இன்று இருப்பதைப் போல இனிமேலும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் மற்ற எல்லோரின் செலவில் தங்கள் ஆற்றல்களுள் ஒன்றை மட்டுமே வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் ஒரேயொரு பிரிவை அல்லது ஒரேயொரு பிரிவின் ஒரு கிளையை மட்டுமே தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். தொழில்துறையானது இன்றைய நிலையில்கூட அத்தகைய மக்களை மிகமிகக் குறைந்த பயனுள்ளவர்களாகவே கருதுகிறது.

ஒட்டுமொத்த சமுதாயத்தால் நிர்வகிக்கப்படும், மேலும், ஒரு திட்டத்தின்படி இயக்கப்படும் தொழில்துறையானது, சகல துறைகளிலும் தேர்ச்சிபெற்ற, தமது ஆற்றல்களைச் சமமான முறையில் வளர்த்துக் கொண்ட, உற்பத்தி அமைப்புமுறையை அதன் முழுப் பரிமாணத்தோடு நோக்கும் திறன்வாய்ந்த மனிதர்களை எதிர்நோக்குகிறது.

ஒருமனிதனை விவசாயியாகவும், இன்னொருவனை காலணி தைப்பவனாகவும், மூன்றாமவனை ஆலைத் தொழிலாளியாகவும், நான்காமவனை பங்குச் சந்தை முகவராகவும் ஆக்கிடும் இந்த உழைப்புப் பிரிவினையின் வடிவம், எந்திரத் தொழிலால் ஏற்கெனவே தகர்க்கப்பட்டுள்ளது. இனி அது முழுவதுமாய் மறைந்து போகும். கல்வியானது, இளைஞர்கள் ஒட்டுமொத்த உற்பத்தி அமைப்புமுறையை வெகுவிரைவில் கற்றுக் கொள்வதைச் சாத்தியமாக்கும். சமுதாயத்தின் தேவைகளை அல்லது தனது சொந்த நாட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு, உற்பத்தியின் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு அவர்கள் மாறிச் செல்வதையும் சாத்தியமாக்கும். ஆக, இன்றைய உழைப்புப் பிரிவினை ஒவ்வொரு தனிநபர்மீதும் சுமத்தியுள்ள ஒருசார்புப் பண்பிலிருந்து இளைஞர்களை விடுவிக்கும். கம்யூனிச சமுதாயம் இந்த வகையில், அதன் உறுப்பினர்கள், பரந்த அளவில் வளர்ச்சிபெற்ற தமது ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கும். ஆனால், இது நிகழும்போது, வர்க்கங்கள் நிச்சயமாக மறைந்து போகும். கம்யூனிச அடித்தளத்தின்மீது அமைக்கப்படுகின்ற சமுதாயம் ஒருபுறம் வர்க்கங்கள் நிலவுவதோடு ஒத்துப் போகாது என்பதும், மறுபுறம் அத்தகைய ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கும் செயலே வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக்கட்டும் சாதனங்களை வழங்குகிறது என்பதும் இதன்மூலம் பெறப்படுகிறது.

இந்நிகழ்வினைத் தொடரும் பின்விளைவு, நகரத்துக்கும் நாட்டுப்புறத்துக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துபோக விதிக்கப்பட்டுள்ளதாகும். விவசாயத்தையும் தொழில்துறையையும் இரண்டு வெவ்வேறு வர்க்கங்களைக் கொண்டு மேலாண்மை செய்வதைக் காட்டிலும் ஒரே மக்களைக் கொண்டு மேலாண்மை செய்வது, முற்றிலும் பொருளாயதக் காரணங்களுக்காக மட்டுமே என்றாலுங்கூட, கம்யூனிசக் கூட்டுறவின் ஓர் அவசிய நிபந்தனையும் ஆகும். ஒருபுறம் பெரும் நகரங்களில் தொழில்துறை சார்ந்த மக்கள் நெருக்கமாய்க் குவிந்து கிடக்க, மறுபுறம் விவசாயம் சார்ந்த மக்கள் நாடு முழுதும் சிதறிக் கிடப்பது, விவசாயம், தொழில்துறை ஆகிய இரண்டின் வளர்ச்சி குன்றிய கட்டத்தோடு தொடர்புடைய ஒரு நிலைமையாகும். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு முட்டுக்கட்டையாகும் என்பதையும் ஏற்கெனவே உணர முடிந்துள்ளது.

உற்பத்தி சக்திகளை திட்டமிட்ட முறையில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துக்காக சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இடையே பொது ஒத்துழைப்பு உருவாக்குதல்; எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும் நிலையை எட்டும் அளவுக்கு உற்பத்தியை விரிவுபடுத்தல்; பிறருடைய தேவைகளைப் புறக்கணித்துச் சிலரது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நிலைக்கு முடிவு கட்டுதல்; வர்க்கங்களையும் அவற்றின் முரண்பாடுகளையும் முற்றாக ஒழித்துக் கட்டுதல்; இன்றைய உழைப்புப் பிரிவினையை ஒழித்துக்கட்டுவதன் மூலமும், தொழில்துறைக் கல்வி மூலமும், பல்வேறுபட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலமும், எல்லோராலும் படைத்தளிக்கப்படும் மனமகிழ் நிகழ்வுகளில் அனைவரும் பங்கெடுப்பதன் மூலமும், நகரத்தையும் நாட்டுப்புறத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலமும், சமுதாய உறுப்பினர்கள் அனைவரின் ஆற்றல்களையும் சர்வாம்ச ரீதியில் மேம்படுத்துதல்; – இவையே தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படுவதால் ஏற்படும் முதன்மையான விளைவுகளாகும்.

(21) கம்யூனிச சமுதாயம் குடும்பத்தின் மீது எத்தகைய செல்வாக்குச் செலுத்தும்?

பாலின உறவு என்பது அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றாகும்; சமுதாயம் அதில் தலையிட எவ்வித அவசியமும் இல்லை. எனவே [கம்யூனிச சமுதாயம்] பாலினங்களுக்கு இடையிலான உறவுகளை முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக மாற்றியமைக்கும். இதனைச் செய்ய முடிவதற்குக் காரணம் அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்குச் சமுதாய அடிப்படையில் கல்வி கற்பிக்கிறது. இவ்வாறாக, பாரம்பரிய திருமண முறையின் இரண்டு அடித்தளங்களை – தனியார் சொத்துடைமையில் வேர்கொண்டுள்ள சார்புத் தன்மையை – மனைவி கணவனைச் சார்ந்திருப்பதையும், குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்திருப்பதையும் தகர்த்தெறிகிறது.

”பெண்கள் பொதுவாக்கப்படுவதற்கு” எதிராக, உயர்ந்த ஒழுக்கநெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்புகின்ற கூக்குரலுக்கு பதில் இதோ. பெண்களைப் பொதுவாக்கும் நிலைமை முற்றிலும் முதலாளித்துவ சமுதாயத்துக்கு உரியதாகும். இன்றைக்கு அது விபச்சாரம் என்னும் வடிவில் முழுமையாக வெளிப்படுகிறது. ஆனால், விபச்சாரம் தனியார் சொத்துடைமையை அடித்தளமாகக் கொண்டது. எனவே, தனியார் சொத்துடைமையோடு சேர்ந்து விபச்சாரமும் உதிர்ந்து போகும். ஆக, கம்யூனிச சமுதாயம் பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு மாறாக, உண்மையில் அம்முறைக்கு முடிவு கட்டுகிறது.

(22) தற்போது நிலவும் தேசிய இனங்களைப் பொறுத்தவரைக் கம்யூனிசத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

பல்வேறு நில மற்றும் வர்க்கப் பாகுபாடுகள் அவற்றின் ஆணி வேரான தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும்போது மறைந்தே தீர வேண்டும். அதுபோலவே, கூட்டுச் சமுதாயக் கோட்பாட்டின்படி தங்களை இணைத்துக் கொண்ட மக்களின் தேசிய இனங்கள், இந்தக் கூட்டிணைப்பின் விளைவாகத் தமக்குள் ஒன்றோடொன்று கலந்து வாழவும், அதன் மூலமாகத் தம்மைத் தாமே கரைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படும்.[3]

(23) தற்போது நிலவும் மதங்களைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

இதுவரை நிலவி வந்துள்ள மதங்கள் அனைத்தும், தனிப்பட்ட ஒரு மனித இனத்தின் அல்லது மனித இனக் குழுக்களின் வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டங்களின் வெளிப்பாடாகவே இருந்துள்ளன. ஆனால் கம்யூனிசம் என்பது தற்போது நிலவுகின்ற மதங்கள் அனைத்தையும் தேவையற்றவை ஆக்கி அவற்றின் மறைவுக்கு வழிவகுக்கின்ற, வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டம் ஆகும்.[4]

(24) கம்யூனிஸ்டுகள் சோஷலிஸ்டுகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?

சோஷலிஸ்டுகள் எனச் சொல்லப்படுவோரை மூன்று வகையினமாகப் பிரிக்கலாம்.

[பிற்போக்குச் சோஷலிஸ்டுகள்:]

முதல் வகையினம் நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழி சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டது. இந்தவகைச் சமுதாயமோ, பெருவீதத் தொழில்துறை, உலக வாணிகம் ஆகியவற்றாலும் மற்றும் இவற்றால் தோற்றுவிக்கப்பட்ட முதலாளித்துவ சமுதாயத்தாலும் அழிக்கப்பட்டுவிட்டது. இன்னும் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமுதாயத்தின் தீமைகளைக் கண்ணுறும் இந்த முதல் வகையினம், நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழிச் சமுதாயம் இந்தத் தீமைகளின்றி இருந்தபடியால், அத்தகைய சமுதாயத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்னும் முடிவுக்கு வருகிறது. அவர்களது பரிந்துரைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் இந்த முடிவை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன.

பிற்போக்கு சோஷலிஸ்டுகளான இந்த வகையினர், என்னதான் பாட்டாளி வர்க்கத்தின் துன்பங்களுக்காக ஆதரவு வேடம் போட்டாலும், நீலிக் கண்ணீர் வடித்தாலும், கீழ்க்காணும் காரணங்களுக்காக அவர்களைக் கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்க்கின்றனர்:

(1) இந்த வகையினம் முற்றிலும் சாத்தியமற்ற சிலவற்றுக்காக முயல்கின்றது.

(2) பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் எதேச்சாதிகார அல்லது நிலப்பிரபுத்துவ முடியசர்களின் அடிவருடிகள், அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் பாதிரியார்கள் ஆகியோரின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்று வருகின்றது. அந்தச் சமுதாயத்தில் நிச்சயமாக இன்றைய சமுதாயத்தின் தீமைகள் இருக்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் இதே அளவுக்கான வேறுபல தீமைகளைக் கொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒரு கம்யூனிசப் புரட்சியின் மூலம் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும்கூட அச்சமுதாயம் வழங்கப் போவதில்லை.

(3) பாட்டாளி வர்க்கத்தினர் புரட்சிகரமாகவும் அல்லது கம்யூனிஸ்டாகவும் மாறியதுமே, உடனடியாக இந்தப் பிற்போக்கு சோஷலிஸ்டுகள் பாட்டாளிகளுக்கு எதிராக, முதலாளித்துவ வர்க்கத்துடன் கைகோத்துக் கொண்டு, தங்களின் உண்மையான சொரூபத்தைக் காட்டுகிறார்கள்.

[முதலாளித்துவ சோஷலிஸ்டுகள்:]

இரண்டாவது வகையினம், இன்றைய [முதலாளித்துவ] சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டதாகும். இவர்கள், தவிர்க்க முடியாமல் அதிகரித்துவரும் இந்தச் சமுதாயத்தின் தீமைகளைக் கண்டு அதன் எதிர்காலம் குறித்த அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தச் சமுதாயத்தின் உட்பொதிந்த ஒரு பகுதியாக விளங்கும் தீமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பும் அதே வேளையில் இந்தச் சமுதாய அமைப்பை அப்படியே தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

இந்த நோக்கத்துடன் அவர்களில் சிலர் வெறும் நலவாழ்வு நடவடிக்கைகளை முன் வைக்கின்றனர். வேறு சிலர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் என்கிற சாக்கில் ஆரவாரமான சீர்திருத்த அமைப்புகளுடன் களத்தில் நிற்கின்றனர். உண்மையில் இச்சீர்திருத்த அமைப்புகள், இப்போது நிலவுகின்ற [முதலாளித்துவ] சமுதாய அமைப்பின் அடித்தளங்களை, அதன்வழியே இன்றைய வாழ்க்கைமுறையை அப்படியே பாதுகாத்து வைப்பதை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.

கம்யூனிஸ்டுகள் இந்த முதலாளித்துவ சோஷலிஸ்டுகளை எதிர்த்து இடைவிடாது தொடர்ந்து போராட வேண்டும். காரணம் அவர்கள் கம்யூனிஸ்டுகளின் எதிரிகளுக்காக வேலை செய்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் தூக்கியெறிய முனையும் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.

[ஜனநாயக சோஷலிஸ்டுகள்:]

இறுதியாக, மூன்றாவது வகையினம், ஜனநாயக சோஷலிஸ்டுகளைக் கொண்டதாகும். இவர்கள் கேள்வி 18-இல் விவரித்தபடி, கம்யூனிஸ்டுகள் எடுத்துரைக்கின்ற அதே நடவடிக்கைகளில் சிலவற்றை ஆதரிக்கின்றனர். கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லுவதன் பகுதியாக அல்ல. எனினும், அத்தகைய நடவடிக்கைகள் இன்றைய சமுதாயத்தின் துன்பங்களையும் தீமைகளையும் ஒழிக்கப் போதுமானவை என்று அவர்கள் நம்புகின்றனர்.

இந்த ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஒன்று, தமது வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் குறித்து இன்னும் போதுமான தெளிவு பெறாத பாட்டாளிகளாக இருக்கின்றனர். அல்லது, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளாய் உள்ளனர். இந்த வர்க்கத்துக்கு, ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கும், அதன்மூலம் சோஷலிஸ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்னதாகப் பாட்டாளி வர்க்கத்தோடு பல்வேறு நலன்கள் பொதுவாக இருக்கக் காணலாம்.

ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சேவையில் இறங்கிக் கம்யூனிஸ்டுகளைத் தாக்காத வரையில், போராட்டத் தருணங்களில், இந்த சோஷலிஸ்டுகளுடன் கம்யூனிஸ்டுகள் ஓர் உடன்பாடு காண வேண்டியிருக்கும் என்பதும், பொதுவாக, முடிந்த அளவுக்கு அவர்களுடன் ஒரு பொதுக் கொள்கையை எட்ட வேண்டியிருக்கும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது.

போராட்ட நடவடிக்கையில் இந்த வடிவிலான ஒத்துழைப்பு, அவர்களுடனான கருத்துவேறுபாடுகளை விவாதிப்பதை விலக்கிவிடவில்லை என்பது தெளிவு.

(25) நம் காலத்திய இதர அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை என்ன?

இந்த அணுகுமுறை நாட்டுக்கு நாடு வேறுபடும்.

முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிபுரியும் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் பல்வேறு ஜனநாயகக் கட்சிகளுடன் இன்னும்கூடப் பொதுவான நலனைக் கொண்டுள்ளனர். அவர்கள் சொந்தம் கொண்டாடும் சோசலிஷ நடவடிக்கைகள் எந்த அளவுக்கு அதிக நெருக்கமாக கம்யூனிஸ்டுகளின் நோக்கங்களை எட்டுவதாக இருக்கின்றனவோ – அதாவது, எந்த அளவுக்கு அதிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை ஆதரித்து நிற்கின்றனரோ அந்த அளவுக்கு அதிகமாக அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைச் சார்ந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கச் சாசனவாதிகள்[5] ஜனநாயகக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் அல்லது தீவிரக் கொள்கையினர் (Radicals) என்று சொல்லப்படுவோரைக் காட்டிலும் வரம்பிலா அளவுக்கு கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமாக இருக்கிறார்கள்.

ஜனநாயக அரசமைப்புச் சட்டம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள அமெரிக்காவில், இந்த அரசமைப்புச் சட்டத்தை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பி, அதனைப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்தும் கட்சியுடன், அதாவது தேசிய விவசாயச் சீர்திருத்தவாதிகளுடன்[6], கம்யூனிஸ்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

சுவிட்சர்லாந்தில், மிகுந்த கலப்படக் கட்சியாக இருந்த போதிலும், தீவிரக் கொள்கையினர் (The Radicals) மட்டுமே கம்யூனிஸ்டுகள் ஒத்துழைக்கக் கூடிய ஒரே குழுவாகும். இந்தத் தீவிரக் கொள்கையினருள் வாட் (Vaudois) மற்றும் ஜெனீவா (Genevese) நகரைச் சார்ந்தவர்களே மிகவும் முற்போக்கானவர்கள் ஆகும்.

இறுதியாக, ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதேச்சாதிகார முடியாட்சிக்கும் இடையிலான போராட்டமே இன்றைக்கு தீர்மானகரமான போராட்டம் ஆகும். முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத வரையில், கம்யூனிஸ்டுகள் தங்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான தீர்மானகரமான போராட்டத்தில் இறங்க முடியாது. எனவே, முதவாளித்துவ வர்க்கத்தை வெகுவிரைவில் வீழ்த்தும் பொருட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியில் அமர அவர்களுக்கு உதவுவது கம்யூனிஸ்டுகளின் நலன்களுக்கு உகந்ததாகும். ஆகவே, அரசாங்கங்களுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் தீவிர மிதவாதக் கட்சியைத் (radical liberal party) தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். அதேவேளை, முதலாளித்துவ வர்க்கத்தின் சுய ஏமாற்றுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி பாட்டாளி வர்க்கத்துக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்னும் கவர்ச்சியூட்டும் உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இருக்கவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றியிலிருந்து கம்யூனிஸ்டுகள் தருவித்துக் கொள்ளக்கூடிய சாதகமான கூறுகள் கீழே காண்பவற்றை மட்டுமே உள்ளடக்கியிருக்கும்:

(1) [கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைக்கும்] பல்வேறு சலுகைகள், பாட்டாளி வர்க்கத்தை ஒரு கச்சிதமான, போர்க்குணம் கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட வர்க்கமாக ஒன்றிணைக்கக் கூடிய வாய்ப்பினை நல்கும்.

(2) எதேச்சாதிகார முடியரசுகள் வீழுகின்ற அதே நாளிலேயே முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் தொடங்கிவிடும் என்பது நிச்சயம். அந்த நாள் முதற்கொண்டு, கம்யூனிஸ்டுகளின் கொள்கையானது, முதலாளித்துவ வர்க்கம் ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் நாடுகளில் தற்போது பின்பற்றிவரும் அதே கொள்கையாகவே இருக்கும்.

***** ***** *****


அடிக்குறிப்புகள்:

[1] மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பின்னாளில் எழுதிய நூல்களில், “உழைப்பை விற்று”, “உழைப்பின் மதிப்பு”, “உழைப்பின் விலை” என்னும் சொல்தொடர்களுக்குப் பதிலாக, மிகவும் துல்லியமாக, “உழைப்புச் சக்தியை விற்று”, உழைப்புச் சக்தியின் மதிப்பு”, “உழைப்புச் சக்தியின் விலை” என்னும் சொல்தொடர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

[2] ஏங்கெல்ஸ் தன் கையெழுத்துப் பிரதியில் இங்கே அரைப் பக்கத்தை வெற்றிடமாய் விட்டிருந்தார். இதற்கு முந்தைய ஜூன் வரைவுரை (Draft of a Communist Confession of Faith) இதே கேள்விக்கான பதிலைக் கொண்டுள்ளது. அதில் கேள்வி எண்-12.

[3] இக்கேள்விக்கான பதிலாக “மாற்றமில்லை” என்று மட்டுமே ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் இக்கேள்விக்குத் (கேள்வி எண்-21) தரப்பட்டுள்ள பதிலில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையே ஏங்கெல்ஸ் உணர்த்தியுள்ளார்.

[4] இங்கேயும் ஏங்கெல்ஸ் “மாற்றமில்லை” என்றே குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் கேள்வி எண்-23-க்குத் தரப்பட்டுள்ள பதிலை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஏங்கெல்ஸ் கருத்து.

[5] இங்கிலாந்தில் 1830களில் தொடங்கி 1850களின் மத்தியில் வரை நடைபெற்ற தொழிலாளர்களின் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது. “மக்களின் சாசனம்” (People’s Charter) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் முழக்கமாகும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஓட்டுரிமை என்பது அதன் முக்கியமான கோரிக்கை. ”அரசியல் ரீதியாக திரட்டப்பட்ட உலகின் முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கம்” என சாசனவாதிகளின் இயக்கம் பற்றி லெனின் எழுதியுள்ளார்.

[6] இது அனேகமாக, நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, 1840களில் ஜார்ஜ் ஹெச்.ஈவன்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ”தேசிய சீர்திருத்தச் சங்கம்” (National Reform Association) என்னும் அமைப்பைக் குறிக்கிறது.

(நூல் முற்றும்)


வேறு மொழிகள் - தமிழ்ப் பகுதி - ஆங்கிலப் பகுதி - நூல் முகப்பு